திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.84 திருக்காட்டுப்பள்ளி - திருக்குறுந்தொகை
மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங்
கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது
ஓட்டுப் பள்ளிவிட் டோட லுறாமுனங்
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.
1
மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடும் நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.
2
தேனை வென்றசொல் லாளொடு செல்வமும்
ஊனை விட்டுயிர் போதவன் முன்னமே
கான வேடர் கருதுங்காட் டுப்பள்ளி
ஞான நாயக னைச்சென்று நண்ணுமே.
3
அருத்த முமனை யாளொடு மக்களும்
பொருத்த மில்லை பொல்லாதது போக்கிடுங்
கருத்தன் கண்ணுதல் அண்ணல்காட் டுப்பள்ளித்
திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே.
4
சுற்ற முந்துணை யும்மனை வாழ்க்கையும்
அற்ற போதணை யாரவ ரென்றென்றே
கற்ற வர்கள் கருதுங்காட் டுப்பள்ளிப்
பெற்ற மேறும் பிரானடி சேர்மினே.
5
அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமுந்
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி
உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.
6
மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார்
பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின்
கையின் மானுடை யான்காட்டுப் பள்ளியெம்
ஐயன் றன்னடி யேயடைந் துய்மினே.
7
வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர்
சீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்
காலை யேதொழுங் காட்டுப்பள் ளியுறை
நீல கண்டனை நித்தல் நினைமினே.
8
இன்று ளார்நாளை இல்லை யெனும்பொருள்
ஒன்று மோரா துழிதரும் ஊமர்காள்
அன்று வானவர்க் காக விடமுண்ட
கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே.
9
எண்ணி லாவரக் கன்மலை யேந்திட
எண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன்
கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியை
நண்ணு வாரவர் தம்வினை நாசமே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com
 

Back - Kd;gf;fk;